கொய்மலர் வளர்ப்பும் வர்த்தகமும்
இயல் நான்காம் வகுப்பின் முதல் மூன்று மாதங்கள் படித்த ஆஸ்வால் பள்ளியின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட வளாகத்தின் முகப்பில் நுழைந்தபோது, கடந்த ஐந்து வருடங்களாய் வருடம் தவறாமல் சந்திக்கும் ஹாலந்து ஜெஸ்பர் புன்னகையுடன் கைகொடுத்தார். பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி ஜூனில் எட்டு தொடங்கி மூன்று நாட்கள் நைரோபியில் ஆஸ்வால் வளாகத்தில் நடைபெற்றது. இது வருடாந்திர நிகழ்வுதான். ஜெஸ்பர் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைக்கும் HPP குழுமத்தில் வேலை செய்கிறார். ஆஸ்வால் வளாகம் உயரமான மேற்கூரை கொண்ட ஆறுபெரும் அறைகளோடு, ஒரு நீண்ட நிலத்தடி அறையும் கொண்டது.
கண்காட்சி வளாகத்தின் அருகில் பட்டமளிப்பு விழா அரங்கில் திறப்புவிழா நடந்தது. அரசு வேளாண் அமைச்சக செயலர் ஒருவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிலத்தடி தளத்தில்தான் நுழைவு அனுமதி பதிவுகள் நடந்தது. முதல் நாளானதால் நல்ல கூட்டம். உள்ளே அரங்குகளில் பாதுகாப்பு சோதனை நடப்பதால் பத்து நிமிடங்கள் காத்திருக்குமாறு அறிவித்தனர்.
கென்யாவின் மற்ற மலர்ப்பண்ணைகளில் வேலைசெய்யும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். உகாண்டா, டான்சானியா, எத்தியோப்பாவிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களாக பார்க்காத இந்திய நண்பர்கள் சிலரை பார்த்தது சந்தோஷமாயிருந்தது. கண்காட்சிக்காக பயணித்து வந்ததாய் சொன்னார்கள்.
கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை முடித்து 1995-ல் ஓசூரில் பிர்லா குழுமத்தின் மலர்ப்பண்ணையில் வேலைக்கு சேரும்போது தெரிந்திருக்கவில்லை கடலின் கரையில் கால்நனைக்கப் போகிறேன் என்று. இருபத்தோரு வருடங்கள் கடந்துவிட்டன; இன்னும் அலைப்பகுதியில்தான் இருப்பது போன்ற உணர்வு. கொய்மலர் வளர்ப்பின் பிரமிப்புகளும், வியப்புகளும், ஆச்சர்யங்களும் அறிமுகமான அந்த தொண்ணூறுகளின் பின்பாதி இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. ஓசூரில் பதினோரு வருடங்கள் முடித்து, மும்பைக்கு 2006-ல், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் மலர்ப்பிரிவில் சேர்ந்தபோது எல்லைகள் அகலமாயின. 2011-ல் கென்யா வந்தபின்தான் மலர்த்துறையின் பிரமாண்டம் கண்முன் விரிந்தது.ஆச்சர்யங்களால் விரிந்த கண்களும் மனமும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
B ஹாலின் நுழைவாயிலில் கண்காட்சி வரைபடம் பங்கேற்பாளர்களின் பெயர்களோடு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நிறுவன அரங்கு ஹால் D-ல் இருந்தது. கிட்டத்தட்ட 170-க்கும் மேலான அரங்குகள்.
வான், தரை, கடல் வழி போக்குவரத்து நிறுவனங்கள், விமான நிலைய பெரிஷபிள் சரக்கு கையாளும் நிறுவனங்கள், உர, மருந்து விற்பனையாளர்கள், மலர் சஞ்சிகைகள், மலரினப்பெருக்க நிறுவனங்கள், விருத்தி வர்த்தகர்கள், மலர் உற்பத்தி பண்ணைகள், இடைநிலை புரோக்கர்கள், பசுங்குடில் வடிவமைப்பாளர்கள், நீர்ப்பாசனத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு மலர் ஏல நிறுவனங்கள்...
நம்பி, காலை வணக்கம்.
1. வளர்ப்பு பண்ணையில், பசுங்குடிலில் மலர்களை கொய்வதிலிருந்தே, அவற்றுக்கான செயல்முறை சங்கிலித்தொடர் ஆரம்பிக்கும். கொய்தவுடன் அடிப்பாகம் உள்ளிருக்கும்படி குறிப்பிட்ட வேதிக்கரைசல் கொண்ட பக்கெட்டுகளில் வைக்கவேண்டும். பக்கெட்டுகள் அரை மணிக்குள்ளாக 8 - 10 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர் அறைக்கு கொண்டுவரப்படும். 4-5 மணிநேரத்திற்குப்பின் அவை வெளியில் எடுக்கப்பட்டு தரம் பார்க்கப்பட்டு, நீளம் மற்றும் பூ விரிந்த அளவு வைத்து பிரித்து அடுக்கி ஒருமுக க்ராஃப்ட் அட்டை சுற்றப்பட்டு மறுபடி வேறு வேதிக்கரைசலில் வைக்கப்பட்டு 2-4 டிகிரி செல்சியஸ் கொண்ட வேறு குளிர் அறைக்கு மாற்றப்படும். (இந்த 2-4 டிகிரி செ வெப்பநிலை கடைசி வாடிக்கையாளருக்கு பூக்கள் சென்றடையும்வரை தொடரவேண்டும்)
2. க்ராஃப்ட் சுற்றப்பட்ட கொத்துக்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு தகுந்தவாறு தடித்த திண்மையான அட்டை பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு விமான நிலையம் செல்லும். (போக்குவரத்து வாகனங்களும் வெப்பக் கட்டுப்பாட்டு கருவிகொண்டவை; 2.-4 டிகிரி செல்சியஸ்) .
3. பூபெட்டிகள் கையாளும் சரக்கு விமானங்களும், இறக்கியபின் டெலிவரிக்கு முன்னால் அடுக்கிவைக்கும் கிடங்குகளும் இந்த வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
4. எங்கள் நிறுவனம், ருஷ்யா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, சைனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரே நாளில் சென்றுவிடும். ருஷ்யாவில் வான்வழி இறக்குமதி கெடுபிடிகள் அதிகம் என்பதால், ருஷ்யா செல்லும் ஆர்டர்கள் வான்வழி ஹாலந்து சென்று, அங்கிருந்து தரை மார்க்கமாக ருஷ்யா செல்ல ஒரு வாரமாகும். தொலைவுக்கு தகுந்தவாறு, பூ விரியும் அளவு வைத்து அறுவடை செய்யவேண்டும்.
5. கொய்மலர் ஏற்றுமதி வர்த்தகத்தில் முதலில் இருப்பது ரோஜாதான். ரோஜாவில் ஆயிரத்துக்கும் மேலான வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இவை தவிர ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க நிறுவனங்கள் புதுவகைகளை வெளியிடும். குறிப்பிட்ட இனப்பெருக்க நிறுவனத்தின் குறிப்பிட்ட ரோஜா வகையை நாம் வளர்த்து ஏற்றுமதி செய்யவேண்டுமென்றால், அந்நிறுவனத்திற்கு காப்புரிமை கட்டணம் செலுத்தவேண்டும். வகைக்கும் இனப்பெருக்க நிறுவனத்திற்கும் தகுந்தவாறு காப்புரிமை கட்டணம் ஹெக்டருக்கு 40000 யூரோக்களிலிருந்து 60000 யூரோக்கள்.