வாசிப்பனுபவம் - பிகேபி-யின் “தொட்டால் தொடரும்”

From HORTS 1993
Revision as of 00:08, 14 March 2020 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

அவை கோவை வருடங்கள். 89-லிருந்து 93-வரை. கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தேன். என் வகுப்பில் நானும், உடன் பயின்ற மதுரை புதூர் சிவகாமியும், அதே வருடம் வேளாண் பொறியியல் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் ஐந்து பேரும், மாணவிகளில் நான்கு பேருமாக நாங்கள் பதினோரு பேரும் ஒரு செட்டாகத்தான் சுற்றித் திரிவோம். சினிமாவிற்குப் போவதென்றாலும், வகுப்பு முடித்து மாலை கோவிலுக்குப் போவதென்றாலும், விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவில் பேசிக் கொண்டிருப்பதேன்றாலும் அனைவரும் பெரும்பாலும் சேர்ந்துதான் செல்வது. அந்த நாட்களின் மருதமலை கோவிலும், வடவள்ளி செல்லும் வழியிலிருந்த பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலும், வேளாண் பல்கலையின் இரண்டாம் பஸ் நிறுத்தத்திலிருந்த பூங்காவும், கேஜி-யின் சினிமா தியேட்டர்களும்...மறக்கமுடியாதவை. எங்களின் பதினோரு சைக்கிள்களுமே பத்தாயிரம் கதைகள் சொல்லும்.

எங்கள் குரூப்பில் இருந்த வேளாண் பொறியியல் சாந்திக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆனது. இரண்டு வீட்டாராலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். கணவர் கண்ணன் பல்கலையின் பக்கத்திலிருந்த பி.என்.புதூரில் ஜவுளிக்கடை ஒன்று வைத்திருந்தார். கண்ணனும், சாந்தியும் பி.என். புதூரில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். இருவரும் மிகப் பொருத்தமான, அட்டகாசமான ஜோடி. அடுத்த ஒரு வருடமும் சாந்தி புதூரிலிருந்துதான் கல்லூரிக்கு வந்துசென்றார். அதன்பின், கண்ணனும் எங்கள் செட்டில் இணைந்து கொண்டார். நாங்கள் வழக்கமாக ஜமா போடுமிடங்களில், கண்ணனின் ஜவுளிக் கடையும், பி.என்.புதூரில் கண்ணன் சாந்தி அவர்களின் வீடும் சேர்ந்துகொண்டது. சாந்தியின் வீட்டில் சனி இரவுகளில், நள்ளிரவு வரை கூட பேச்சுக் கச்சேரி நடக்கும். சிரிப்பும், மகிழ்ச்சியுமாய்...பசுமையாய் இன்றும் நினைவிலிருக்கும் நாட்கள்.

குரூப்பில் சரஸ்வதி நன்றாக பரதம் ஆடக் கூடியவர். மேட்டூரைச் சேர்ந்த குருவிற்கு, சாந்தியின் மேல், திருமணத்திற்கு முன்பு மெல்லிய இன்ஃபேச்சுவேசன் இருந்தது. அது சாந்தியின் திருமணத்திற்குப் பின்பு, சாந்தியின் மேல் மிகப் பெரும் மரியாதையாகவும், பெரும் அன்பாகவும் பரிமாணம் கொண்டது. குரு ஓர் ப்ரமாதமான ஓவியன். எங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் நாங்கள் முதலில் பகிர்ந்துகொள்வது கண்ணனிடமும், சாந்தியிடமும்தான். திருமணத்திற்குப் பிறகு சாந்தி மிகவும் மெச்சூர்டாக மாறிப் போனார். குரு கொஞ்சம் எமோஷனல் டைப். ஒவ்வொரு முறையும் ஏதேனும் விஷயங்களில் குரு எமோஷனல் ஆகும்போதெல்லாம், அறிவுரை சொல்லி அமர்த்துவது சாந்திதான்.

ஒருநாள் வெள்ளி நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. நானும் குருவும், நாங்கள் தங்கியிருந்த கல்லூரியின் தமிழகம் விடுதியின் மொட்டை மாடியில் இருட்டில் உட்கார்ந்திருந்தோம். விடுதி முழுதும் உறக்கத்திலிருந்தது. தூரத்தில் விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் சோடியம் வேப்பர்களின் மஞ்சள் வெளிச்சம். பேச்சின் கனத்தில் குரு உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் குரல் தழுதழுத்திருந்தது. நான் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து “சரி, போய்ப் படுப்போம். நாளைக்கு காலையில ஏழு மணிக்கு ப்ராக்டிகல் க்ளாஸ் போகணுமில்லையா?” என்றேன். கீழே குரு அறைக்கு வந்ததும், டேபிளின் மேலிருந்த செய்தித்தாள் அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தான். “இதப்படி” என்றான். ”சரி” என்று சொல்லிவிட்டு அவனைத் துங்கச் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்தேன். எனக்கு இன்றைக்கு தூக்கம் வராது என்று நினைத்தேன். விளக்கைப் போட்டு, புத்தகத்தை பிரித்தேன்.

அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிதாகப் பத்தகம் வாங்கினால், அதை எங்கு, எப்போது வாங்கினோம் என்று புத்தகத்திலேயே எழுதிவைப்போம். எழுத்தாளர்கள் டெடிகேட் செய்வதுபோல், நாங்களும் யார் நினைவாக புத்தகம் வாங்கினோம் என்று முதல் பக்கத்தில் எழுதுவோம். குரு அப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தான் “என் அம்மாவைப் போன்ற...என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தும்...சாந்திக்கு...”

அப்புத்தகம்...பிகேபி-யின் ”தொட்டால் தொடரும்”...