வேள்பாரி

From HORTS 1993
Jump to navigation Jump to search
வேள்பாரி

அனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம்🙏. பறம்பு மலை பயணம் நேற்றிரவோடு முடிந்தது. பயணம் முடிந்திருக்கலாம். உறவு தொடங்கி விட்டது. ஆம். பறம்புக்கும் பாரிக்கும் கபிலருக்குமான உறவில் நானும் இனி என்றென்றும். எனவே எங்களது பிரயாண அனுபவங்களை முழுமையாக தொகுத்து உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி...🙏.

வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி எந்தன் பார்வையில்.

வேல் முருகனில் தொடங்கி 'வேள்பாரி' வரை.

கடையெழு வள்ளல்களில், பெரும் கொடை வள்ளலான வேந்தனின் கதை. வேள்பாரி வேந்தனின் கதை. இல்லையில்லை கவிதை... அப்படியும் சொல்லி சுருக்கி விட முடியாது. இது ஒரு காவியம்.

வேள்பாரியே நீ என்னை கடைச் சங்ககாலத்திற்கு அழைத்துச் சென்று விட்டாய். உன்னோடு பயணிப்பது எனக்கு பேரானந்தமாக உள்ளது. நிறைய நாவல்கள் படித்து ‌அனுபவப்பட்டவள் அல்ல நான். சொல்லப்போனால் என் வாசிப்பின் ஆரம்பமே உன்னோடு தான் தொடங்குகிறது. அரை நூற்றாண்டை அநியாயமாய் தொலைத்து விட்டேனே என என்னை ஏக்கம் கொள்ளச் செய்திவிட்டாயே எவ்வியின் வழித் தோன்றலே. உன் மூலம் இனி நான் யூ டர்ன் அடித்து என் தமிழ் நோக்கி,என் சங்கம் நோக்கி,என் மூதாதையர் நோக்கி, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் என் ஆதி அறிய புறப்பட்டு விட்டேன் இந்த ஆதி மலை வழியாக .

சிறு குறு நாவல்கள் மட்டுமே படித்ததுண்டு. பள்ளி காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரலாறுகளை புரட்டி பார்த்ததுண்டு. எல்லாமே ஒரு வரிக் கவிதையாக மட்டுமே என் சிந்தைக்குள் இருந்த நிலை மாறி , ஒவ்வொரு ஆளுமையையும் ஆழமாக அறிய, சரித்திர சமுத்திரத்தில் முங்கி முத்தெடுக்க காரணமாகிராய் நீ.

உன்னைக் கண்டு வியப்பதா...? உன்னை தன் எழுத்தாற்றலால் எங்கள் கண்ணுக்குள் உயிரோடு உலவ விட்ட எழுத்தாளரை கண்டு கரம் குவிப்பதா...? இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறேன். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்ற ஒற்றை வரிக் கவிதையை எங்களுக்கு காவியமாக்கி தந்த எழுத்தாளர் திரு. சு.வெங்கடேசன் அவர்களுக்கு முதலில் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

எழுத்தாளர் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், அந்த உயிர்களுக்கு உருவம் கொடுத்தவர் ஓவியர் மணியம் செல்வன் அவர்கள். புராண சித்திரங்களின் புகழிடம் தானே அவரின் பிறப்பிடம். தந்தை வழி மைந்தன் மா.செ.அவர்கள். கண்டிப்பாக அவரின் தூரிகை தவிர்த்து நாம் பறம்பிற்குள் பயணப்பட முடியாது. நன்றி அய்யா உமது சித்திரம் சரித்திரம் பேசுகிறது.

வேளீர் குலத் தலைவனே உனக்குள்ளே, குறிப்பாக குறிஞ்சிப் புலவர் கபிலரிடம் உனக்கான அந்த ‌உயர்ந்த நட்புக்குள்ளேயே அடிக்கடி, அடிக்கு அடி புதைந்து போகிறேன். மீண்டு எழ முடியவில்லை. அதிலும் ஒரு சுகம் இருப்பதால் அங்கேயே குளிர் காய்கிறேன். எனக்கு 'பேரெலி ' போர்வை வேண்டாம். உங்களுக்கான நட்பின் நினைவுகளே என்னை இதமாக்குகிறது.

கூடு என்பது பறவைக்கான தங்குமிடம். வானம் தான் வாழ்விடம். உண்மை தான் ஒரு நாள் உங்களின் வானமே நாங்களாய் விரிந்திரிப்போம். என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை நட்பின் பால் உனக்கு. திகைத்துப் போகிறேன்.

'பேசும் ஒலியை ஓவியமாய் வரைவது தான் எழுத்து' சிந்தித்துப் பார்க்கிறேன்.. ஆமாம் அதிர்வுகள் வளிமத்துள் ஊடுருவி, செவி நரம்பால் தாக்கப்பட்டு, மூளையில் உணரப்படும் ஒலியை, விரல் வடிக்கும் சித்திரம் தான் எழுத்து. உணர்த்த முயல்கிறார் கபிலர் நீலனுக்கு.

மரத்தின் கொப்புகளை பார்த்து பழக்கப் பட்ட நம்மை, மரத்தின் கொம்புகளுக்குள் நுழைத்து, கபிலரோடு நம்மையும் கலங்கடிக்கும் அகுதையின் குலக்கொடி , வேளாண் குல வாரிசு நீலன் என்ற மாவீரன், பின்னர் கபிலரால் மகனாகவே பார்க்கப்படுகிறான்.மயிலாவின் மனதுக்கு நெருக்கமானவன். நம் மனதுக்குள்ளேயும் தங்கி விடுகிறான்.

தீயில் சுட்ட உணவு 'ஆண் உணவு'அது அவசரத்தின் அடையாளம். நீரில் வேக வைத்த உணவு 'பெண் உணவு'அது பக்குவத்தின் அடையாளம். நீரும் மண்ணும் போலத்தான் ஆணும் பெண்ணும். ஒன்றோடொன்று கலக்கவும் முடியும், மறுநொடியே ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும். இது ஒன்று தான் இயற்கை உருவாக்கிய ஒரே பிரிவினை. அப்படியே இருந்திருக்கலாமோ. அமைதி காக்கப்பட்டிருக்கும்.

'ஏழிலைப்பாலை' பேரதிசியம் . ஆம் எம்பெருமான் முருகனுக்கு காதல் வரம் தந்த பேரதிசியமரம். மரத்தின் உணர்வுகளும் கூட பூக்கின்றன. புரிந்து கொள்ள முடியாத பேரதிசியம் தான். பெண்ணின் ஸ்பரிசம் பட்டு பேரதிசியமாகும் ஏழிலைப்பாலை. இதை படித்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் இந்த பூவின் மனம் உறுதியாக வீசிச் செல்லும் .

கார்த்திகேயன் வழியாக கார்த்திகையின் கதை. பத்து பேரதிசியங்களுல் ஒன்றான 'கருநெல்லி' உண்டு பகலிலும் விண்மீன்களின் நகர்வறிந்த வேலன். வியந்து போகிறேன் விண்ணை நோக்கி. ஆறைக் (6) குறியாய்க் கொண்ட ஆறுமுகனுக்குள் இத்தனை குறியீடுகளா. காலங்களும் கதிரவனும், சேவலும் மயிலும்,நெருப்பும் மழையும் . இப்படி கார்த்திகைக்குள் காலக் கணக்கு பொதிந்து கிடக்கிறது.

கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை. ஈட்டியை விசை கொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அல்ல...கதையால். ஆம் பாரி, இக் கதையால் தான் உன் தன்னிகரற்ற வலிமையை தரணி பாடுகிறது. சதை மறைந்தால் என்ன? சரித்திரம் படைக்கும் உன் கதை காலம் உள்ள வரை.

புதிய மேனி கொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது.காதல் புனிதமானது என்பது அங்கிருந்து தான் ஆரம்பமாகியதோ? தீக்களி அப்பி தீக்குள்ளும் நடனமான கற்றுத் தந்த ஆசான்கள்.

ஆலாப் பறவையின் பெயர் தாங்கி ஆலாய்ப் பறக்கும் இளமருதனின் 'ஆலா' குதிரை. இந்த 'ஆலா ' குதிரை இன்று வரை எங்கள் மதுரை வட்டாரத்தில் ஆலாய்ப் பறந்து கொண்டு தான் இருக்கிறது சொல் வழக்கில் என்பது, எங்களுக்கும் அதாவது என் மதுரை மண்ணுக்கும் இளமருதனுக்குமான உறவுக்கு ஒரு சான்று. அவசரப் படாதே என்பதை என் மக்கள் ஆலாய்ப் பறக்காதே என்னும் ‌சொல்லாடலில் தான் குறிப்பிடுகின்றனர். என் விபரம் அறிந்து, என் தந்தையே என்னை இந்த 'ஆலா ' குதிரை (வார்த்தை) கொண்டு, அடிக்கடி கடிவாளம் போட்ட நினைவுகள் வந்து, எத்தனையோ நூற்றாண்டுகளின் தூரம் தொலைக்கிறது.

'ஓடும் நீருக்குள் உறங்கும் நதி' - பெண். என்ன ஒரு அழகான ஒரு வரிக் கவிதை. புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கலாம் பெண். இருப்பினும் நறுக்கென்று நான்கே சொல் போட்டு எத்தனை நளினமாக, எத்தனை அழகான ஒற்றைவரி. பெண்ணாகவே இருந்த போதும், வியந்து தான் போகிறேன்.

'கொல்லிக்காட்டு விதைகள் ' உயிருக்கு நியாயம் செய்கிறது.

கொற்றவை கூத்து குடல் நடுங்க வைக்கிறது. கூடவே தர்மம் பேசப்படுகிறது.

அறுபது நாட்களுக்கு ஒருமுறை முட்டையிடும் அறுபதாங்கோழி. ஓங்கிக் குரல் எழுப்பி, அன்னம் போல் உயிர் துறக்கும் முருகனின் கொடிப்பறவை. பாரி கபிலரின் நட்புக்கு விருந்தாகிறது.

ஆந்தை முகமும் அணில் உடலும் குரங்கு கால்களும் கொண்ட தெய்வவாக்கு விலங்கு. கடலையும் வானையும் இணைக்கும் பேராற்றல் கொண்ட வடக்குவா செல்லி. கொற்றவையின் குழந்தை. திசை அறிய பயன்பட்ட தேவாங்கு பின்னர் உருவம் சார்ந்து, திட்டுவதற்கான வார்த்தையாய் மாறிப் போய் உட்கார்ந்து இருக்கிறது. போற்றப் பட்ட விலங்கை தூற்றுவதற்கா பயன்படுத்துகிறோம்...!

குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும் போதும், தோற்கும் போதும் தான் ஒரு ஆண் தாய்மையை அனுபவிக்கிறான். பாரியின் அனுபவம் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் நிகழ்கிறது.

தெரிந்து கொள்வதற்கும் , அறிந்து கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அங்கவை மூலம் கபிலர் நமக்கும் பாடம் எடுக்கிறார்.

'தேக்கன்' காடறிய நம்மையும் கவனமாக அழைத்துச் செல்கிறார்.

எத்தனையோ விலங்குகளும் பறவைகளும் மட்டுமல்லாது மரம் செடி கொடிகள் பற்றியும் அறிந்து கொள்ள வைக்கிறார்கள். அவற்றிற்குள் புதைந்து கிடக்கும் அதிசியங்களை அட்டவணை படுத்துகிறார்கள்.

வானம், காடு, மலை, மரம், செடி கொடி , மண், நீர், நிலம், நெருப்பு, காதல், போர் இவையே வாழ்க்கையாய், வாழ முயற்சித்திருக்கிறான். மனிதன் மனிதனாக வாழ்ந்திருக்கிறான்.

இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக தனது உண்மைகளை மறைத்து வைத்து விளையாடுகிறது. இவற்றை கண்டறிவதும், புரிந்து கொள்ளுவதும் எவ்வளவு சுவையூட்டக்கூடிய ஒன்று என்று உம் கூற்றுப்படி எங்களையும் அனுபவிக்க வைத்திருக்கிறாய்.

'காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும் போது, மனிதன் பொறி கலங்கிப் போவதைத் தவிர வேறு வழி என்ன' உண்மை... முற்றிலும் உண்மை... சத்தியமான வார்த்தைகள். இப்பொழுது மனித குலமே பொறி கலங்கித் தான் போய்க் கொண்டு இருக்கிறது இந்த கொரோனாவினால். மரணத்தின் ஆட்சி கண்டு மனிதன் நிலைகுலைந்து தான் நிற்கிறான். அன்று திசைவேலருக்கு தோன்றியது இன்று நம் உணர்விலும் .

பாதி கடல் (கதை) தான் கடந்து இருக்கிறேன். இப்பொழுதே என் மூச்சை பிடித்து நிறுத்துகிறாய். திக்கு முக்காடுவதால் சிறிது இளைப்பாறுதல் வேண்டி இடைவெளி விட்டு இருக்கிறேன். சிறிய இடைவெளி தான். மீண்டும் புதுத் தெம்போடு உன்னை தொடரப் போகிறேன். இனி வரப் போவது யுத்தகளம் அல்லவா. நானும் என்னை திடப்படுத்தி திறன் கொண்டு வருவேன்‌. சிந்தை சிறகடிக்கும் பறம்பு நாட்டில் சந்திப்போம் மறு பாதியில்...🙏🙏🙏.


இதோ மீண்டும் தொடங்கி விட்டது பச்சை மலை பயணம் பனை மகனை நோக்கி.

சோமப்பூண்டு... முருகனும் வள்ளியும் கொடுத்த காதல் பரிசு. உருகும் பூண்டில் உருகும் காதல். கூத்திலே மயக்கும் குடி , மழவன்குடிக் கூத்து. மழவன்குடியோ மயக்கும் 'குடி'யில் .

பூண்டுநீரை குடிக்காமல் உணரவே முடியாது. குடித்தால் உணரவே முடியாது. குறல் போல் ஈரடியில் ஓர் இலக்கணம். ஆம் உணரமுடியா பானம் ... அந்த சோமபானம்.

வானில் பறப்பதும், நீரில் மிதப்பதும் அரிதல்ல... ஆனால் இவ்விரண்டையும் தன்னுள் நிகழ்த்துவது தான் அரிது. கண்டிப்பாக... ஆம். அதை நிகழ்த்திக் கொண்டிருந்தது சோமபானம். தன்னுள்ளே நிகழும் எதுவும் தனித்துவமானது தானே.

மயக்குதல் பொதுவானது. அது மதுவுக்கும் உண்டு. கலைக்கும் உண்டு. என்ன ஒரு ஒப்பீடு! ஆம் முன்னதை உண்டு மயங்குவர். பின்னதை கண்டு மயங்குவர். மயக்குதல் பொதுவானது தான்.

அத்திக்காய் பூக்காமல் காய்ப்பது, வாழ்வின் ஒரு கட்டத்தை ,தாவிக்கடப்பதின் அடையாளம். இங்கு அத்திக்காய் காதலுக்கு மட்டுமல்ல பொய்யாநாவிற்கபிலருக்கும் சேர்த்து செய்தி சொல்கிறது.

வெடத்தைப்பூ கணக்கில்லா காதல் கதை சொல்லுமாம். இதனருகில் காதல் செய்ததால், வெடலைகள் ஆகிப் போன காதலர்கள். குறிஞ்சியின் குறியீடாம் இந்த வெடத்தை பூ. வெடலைப்பருவ காதலின் சாட்சியாகிறது.

உயிர்க்காதலைச் சொல்ல பூ இருந்தது என்னவோ சுகம் தான். அதே போல் உயிரை எடுக்கவும் மரம் இருந்திருக்கிறது. 'ஆட்கொல்லிமரம்' இலையின் சுணையால், அமைதியாக கொலையும் செய்யும் மரம். வட்டமிடும் ஊன் உண்ணி பறவைகள் , சத்தமிடவில்லையே என நம்பிக்கையுடன் காத்திருந்த காடறிந்த ஆசான், இழப்புகளை உணர்ந்த பின்னும், இழந்தவைகள் மூன்றும் அவர் ஊன் ஆனபோதும், அங்கும் காடறிய முயலும் கடமையுணர்ச்சி கண்களை கலங்க வைக்கிறது.

பறக்கும் பழம் அதாவது சிறகு நாவல் அதிசியத்தைக் காட்டி , நம் கதை நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் ஆதினி. பொதினி மலையின் குலமகள். எழில் மங்கை ஆதினி. இவர்கள் காதல் கொஞ்சம் வித்தியாசமானது தான். இவர்கள் பேசாமலேயே மனதால் காதல் கொண்டவர்கள். கருத்தை சோதித்து காதல் வளர்த்தவர்கள். எனவே தான் பதினெட்டு மருத்துவ குடிகளை, 'சீர்' ஆக சுமந்து பாரியுடன் பறம்பு அடைகிறாள் ஆதினி.

ஆயுதத்திற்காக சென்றானோ... இல்லை ஆதினிக்காக சென்றானோ... ஆலம்பனைக்கள்ளை கொடுத்து, பொதினியில் ஆதினையை உறுதி செய்தான் பாரி.

எலிகளை உணவாகக் கொள்ளும் பூனைகளின் எதிரிலேயே எலிகளுக்கு உணவு. பூனை வணங்கி கொடுக்கும் மயக்கம்,நம்மை சிறிது நகைக்க வைக்கிறது.

இடி விழுந்து பிளவுறும் பாறையின் ஊடே உருவாகும் புதிய சுனை நீர். விழுந்த இடியின் நாள் கணக்கும், பிடிபட்ட விலங்கின் வயதுக்கணக்கும் இணைந்து தான் இலையில் விருந்தாகிறது. அப்பப்பா... நாவில் சுவை உணருகிறேன். ஓ...இதனால் தான் எங்கள் வழக்கில் இப்படியொரு சொல்லாடல் இருக்கிறதா? 'வாய்க்கு சுனையா சாப்பிட தோணுது என்று'. இன்று சுத்திகரிக்கப்பட்ட ஆனால் சுவையில்லாத நீரில் தான் சமையல். அன்று இறைச்சி முதல் இடி வரை கணித்து, இயற்கையோடு சமைத்து உண்டு செரித்து வாழ்ந்திருக்கிறான் மனிதன்.

'மேகத்துக்குள் வாழும் உணர்வு' எவ்வியூர். இது ஆதினியின் உணர்வு. உயர்ந்த பறம்பு மலையின் மேலே, சற்றே மேகத்திற்கு கீழே வாழ்க்கை. கற்பனையில் பறக்க நினைத்தவள் சட்டென வெட்கி நிலை கொள்கிறாள். இயற்கையை ரசிக்கத் தெரிந்தவள், கருணைக் கடலோடு, வானத்தையே எல்லையாகக் கொண்டு வாழத் தொடங்குகிறாள் மகராசி.

பறம்பின் ஓர் அதிசியமென 'இராவெரி' மரம் காட்ட,கும்மிருட்டில் கட்டியவளோடு காட்டுக்குள் பாரியின் தேர்ச்சவாரி. ஜோதி விருட்ச மரம் காட்டச் சென்றவன் மழைக்காக ஒதுங்கிய குகைக்குள் புவியின் பேரதிசியத்தை கண்டு எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிறான். ஆம் அன்று அவர்கள் குகைக்குள் கண்டது 'ஒளி உமிழும் வெண்சாரைகள்' பிறவிப் பயன் அடைவதை போல் உணருகிறான் பாரி. வெண்சாரைகளின் ஒளியில் இருவரும் அச்சம் மறந்து நிலா காய்கின்றனர். காரணம் சாரைகளும் தவத்தில் இருந்ததால் தவறேதும் நடக்காது என்று நம்புகிறான் பாரி. துரோகம் செய்ய அவைகள் மனித ஜென்மம் அல்லவே. மேலும் பறம்புக்கும் நம்பிக்கை துரோகத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அதை கடுவன் கடுமையாக இல்லையில்லை கொடுமையாக நிரூபித்துச் சென்றிருக்கிறான்.

குகை நமக்கானதாக மாறியதுபோல்,தேர் முல்லைக்கானதாக மாறிவிட்டது. ‌பாரியின் வாழ்க்கையை இன்று வரை பறை சாற்றும் சரித்திர பொழுது அது.

தாவரங்களின் ‌உணர்வுகளுக்கும் மதிப்பளித்த  உயர்ந்த வள்ளல்.

அவன் கூற்றுப்படி அவன் வாழ்ந்திருக்கிறான். விலங்குகளோடும் தாவரங்களோடும் மொத்தத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்வை தொடங்கியவன் பாரி. இறுதி வரை வாழ்ந்து நிரூபித்தவன் பாரி.

வெற்றிலையில் ஆண் பெண் வெற்றிலைகள். மெல்லுகிறவர்களின் வாயில் எவ்வளவு ஊறுமோ அதே அளவு அருகில் இருப்பவர் வாயிலும் ஊறும். அட ஆமாம். ஊறி இருக்கிறது என் வாயிலும், என் 'அம்மாயி ' போட்ட வெற்றிலை. வெற்றிலையின் இச்சிறப்பை வாரிக்கையன் விளக்கியபோது கபிலர் வாயும் அசைந்து காட்டிக் கொடுத்தது அதன் சிறப்பை.

கருப்பன் குடியின் 'சுவைப்புல்' கரும்பா புல்...கரும்பு தான் அது. கருப்பன் குடி கண்டதனால் அது கரும்பு ஆனதா?

பாரி கொடுக்கும் கரும்புச் சாற்றின் சுவையை கபிலர் அனுபவித்து விளக்குகிறார் மூவேந்தர் அவையில். கேட்கும் நமக்கு அதன் தன்மையால் மட்டுமல்ல.நட்பும் கலந்து பரிமாறப்படுவதால் தான் சுவை கூடியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

'தத்தமுத்தம்' யானை பற்றிய அறிவுத் திறன் கொட்டிக் கிடக்கும் பாடசாலை. 'மதம்' பிடிக்கும் யானைகளுக்கு அறிந்திருக்கிறோம். ஆனால் நமக்குள் உள்ள மதங்கள் போல் வித விதமாக மதங்களும் பிடிக்குமாம். புதிய அறிவு. யானைக்கு மதம் நாம் 'தெரிந்து கொண்டது'. யானைக்கு மதங்கள் நாம் 'அறிய வேண்டியது' அங்கவை போல் நாம் கேட்கா விட்டாலும் நம் ஆசிரியர் நமக்கு அடுக்கி கொடுத்திருக்கிறார் அறிந்து கொள்ளுங்கள். குட்டமதம், சரளமதம்,உள்மதம் போன்ற எல்லாவற்றையும் தாண்டி வெறி கொண்டு அழித்தாட துடிக்கும் 'எரிமதம்' என்று வகைவகையான மதங்கள் யானைகளுக்குள்ளும் உண்டு. எந்த மதம் பிடித்தாலும் ஆபத்து தான். யானைகளுக்கானாலும் சரி, மனிதர்களுக்கானாலும் சரி. மதம் வேண்டாம். மனிதம் மட்டுமே வளர்ப்போம்.

சென்றிப்பு'கை' நீட்டி ஆபத்தை அறிவித்து,உதவி கேட்க உயரும் ஊசிப் புகை. கூடவே மறு(பு)கை தோன்றினால் உதவி கிடைத்தாகி விட்டதாக அர்த்தம். செய்திகள் சென்று சேருகின்றன சென்றிப்புகை வழியாக. தொழில் நுட்பம் தாண்டிய தொலைநோக்கு பார்வை.

புதையலை காட்டிக் கொடுக்கும் கருநொச்சி. மணிக்கற்கள் இருக்கும் மண்ணுக்குள் தன் வேர் விட்டு வளர்ந்து, சைகை காட்டும் கருநொச்சி. காடர்களும் கருநொச்சியும் இருக்கும் வரை புதையலை பாதுகாக்க முடியாதாம். புதையலை அறிய கருநொச்சி. பகலிலும் விண்மீன்கள் தெரிய கருநெல்லி. வெற்றியை கண் முன் காட்ட கருங்கிளி. விஷம் அறிய கருங்குரங்குகுட்டி. அனைத்து நல்லதும் திராவிட நிறத்திலே தொடங்குகிறதே...!


செல்வங்கள் மொத்தமும் பாதுகாக்கப்படும் பெரும்பாழி நகரம். வேளிர் குலங்களின் சொர்க்கபூமி. தலைமுறை தலைமுறையாக கட்டிக் காக்கப்படும் பொக்கிஷ பூமி.

குன்று குன்றுக்கும் வகை வகையான வைடூரியங்கள். மணிக்கற்கள் மலைபோல் குவிக்கப்படுகின்றன பாழி நகரில்.அது பறம்பின் மரபாக பாதுகாக்கப்படுகிறது. மரபின் மகனிடம் மரபைத் திருட நினைத்தால் மரணம் தான் வேறென்ன...?

மண் போர்த்தி உறங்கும் நெடுங்காடர்கள். இன்றும் இருக்கிறார்கள் காடுகளுக்கு பதில் கடற்கரையில். மணல் போர்த்தி உறங்கும் நாடர்களாக.

முறியன் ஆசானின் 'திங்கள் மூலிகை' திகைப்பூட்டுகிறது. முறிவுகளின் வைத்தியன் முறியன் ஆனான். திங்காமல் இருப்பதற்கு திங்கள் மூலிகை திங்க வேண்டும். வியப்புக்குரிய இயற்கை வைத்திய முறைகள்.

நிலமொரண்டி காதல் மலர். மனமொத்த இரு மனங்களின் மூச்சுக் காற்றால் மலரும் வேர் தாங்கும் மலர். பாரியுடன் ஆதினி, நெஞ்சோடு நிலமொரண்டி, கலைஞனின் கை வண்ணத்தில் காதல் ததும்ப ஒரு காமன் விளக்கு. பொற்சுவைக்கு பொருத்தமான பரிசி. உணர்வுகளால் நிறைந்து, உணர்வுகளற்று வாழ்ந்து , உன்னதமாய் உயிர் நீத்து, பாரி மனதில் மட்டுமல்ல. பறம்பின் குடியில் மட்டுமல்ல. இப்பொழுது பறம்பை மடியில் சுமக்கும் ஒவ்வொரு இதயத்திலும் மகரக்குழைக் காதணி ஆட வீற்றிருக்கும் பொன் மகள் இந்த பொற்சுவை.

'இந்த உலகில் வரைய முடியாத ஓவியங்கள் இருக்கும் வரை ஓவியன் வரைந்து கொண்டே தான் இருப்பான்' கலைஞனின் வரியை மெய்பித்து கண்ணுக்குள் கவி பாடுகிறாள் பாண்டி நாட்டு இளவரசி சக்கரவாகப் பறவையுடன்.

பாரி அழிக்கப்பட்டால் அறம் அழிக்கப்பட்டதாகவே பொருள். பொற்சுவையின் கூற்று . ஆம்...அதுவே மனித குலக் கூற்றும்.

பறம்பின் வாழ்வனுபவம்? வானின் ஆசான் வினவ,இது தான் வாழ்வு! புலவனின் பதிலில் பாரி பரவிக் கிடக்கிறான்.

எனது துன்பத்தை பாரி அறிய நேர்ந்தால் குருதி சிந்துவான். கபிலரின் வார்த்தைகளுக்குள் நட்பு உயிர் பெறுகிறது.

தட்டியங்காடு தாங்க முடியா இழப்பை சந்திக்கிறது. சவக்காடாய்த் தான் தெரிகிறது சாவுப்பறவை முட்டையிடும் இந்த சாமேடு.

வாரிக்கையனும் சோமக்கிழவனும், தேக்கனும் கூழையனும், பாரியும் முடியனும், உதிரனும் நீலனும் இப்படி தலைமுறை தலைமுறையாக அறமும் வீரமும் கடத்தப்படுகிறது. அதை கடைபிடித்த உன்னத மரபு பாரியினுடையது.

சூழ்ச்சியால் சரிக்கப்பட்ட இரவாதன். தவறிவிட்டதாக தங்களையே மாய்த்துக் கொள்ளும் இரு பெரும் முதுமைகள். பறம்பின் ஆசான் தேக்கன்,ஐந்தாண்டுக்கு ஒரு முறை பூக்கும் சாமப்பூவின் மணத்தை மனதில் நுகர்ந்தபடி நினைவு அறுத்தாராம். வானின் ஆசான் திசைவேலர், கார்த்திகையின் ஆறாம் ஒளியைச் சுற்றி இளநீல வட்டம் பார்த்த படியே மங்கி அணைந்தாராம் . ஒருவருக்காக காடே அழுதது. இன்னொருவருக்காக வானும் வருத்தப்பட்டது. இத்தனை இழப்புகளையும் ஒருசேர பார்க்கும் (படிக்கும்) என் கண்கள் தூக்கம் தொலைத்தது. இயற்கை காத்தவர்களை மனிதன் அழிக்கிறான்.

நான் வரிசைப்படுத்த எத்தனையோ கொட்டிக் கிடக்கிறது இந்த பறம்பு மலையில். இருப்பினும் இத்தோடு இடைவெளி விடுகிறேன். காரணம் ஒவ்வொருவரும் அவரவர் கண் கொண்டு , வீரயுக நாயகன் வேள்பாரியை பார்க்க வேண்டும் என்பது தான். என் குறிப்புகளை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள் பறம்பு நோக்கி.

ஒவ்வொரு மரம், செடி ,கொடி, மலர், மண்ணில் மட்டுமல்லாது ஒவ்வொரு உயிரிலும், கலந்து வாழும் வாழ்க்கை பறம்பினுடையது. இயற்கைகாக வாழ்க்கை. இயற்கையோடு வாழ்க்கை. இயற்கையே வாழ்க்கை.

திசையற்றவர்களையும் நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக அள்ளி அரவணைத்து நிற்கும் பறம்பு நாட்டைத் தாய்நாடு என்று சொல்வதை விட வேறென்ன சொல்ல முடியும்...? பெருமை கொள்கிறது மனது பறம்பு நாடு தாய் நாடு தான். என் தமிழ் நாடு தான்.

என்றோ நடந்தவைகளோ அல்லது நடந்ததாக கருதப்பட்டவைகளேயானாலும் எதிலும் எப்போதும் எதற்காகவும் அறம் அழிக்கப் படவே கூடாது. இவ்வுலகம் நிலைக்க அறம் நிலைக்க வேண்டும்.

அறம் சார்ந்த ஒரு கொடை வாழ்வு இங்கு மீண்டும் நினைவு படுத்தப்பட்டுள்ளது. பறம்பைக் கடக்கும் ஒவ்வொரு இதயமும், பாரியை மட்டுமல்ல பறம்பின் ஒவ்வொரு கல்லையும் மண்ணையும் கருத்தினில் சுமந்து செல்வர். மூங்கில் நெல்லும், பலா வாசமும், வள்ளிக்கிழங்கும்,தேனோடு எங்கள் நாவில் சுவை கூட்டும். வேந்தர்களும் அறியப்படுபவர். கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுக்கு முந்தைய நம் தமிழ் பேசப்பட்டிருக்கிறது. நான் அறியப் பட்டிருக்கிறேன். ஆம் 'ஆதி' அறிய ஆதி மலைக்கு கபிலரோடு பிரயாணம் செய்த நான் , தமிழோடு என்னை ஒரளவு அறிய முற்பட்டு இருக்கிறேன். நன்றிகள் பல மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் பறம்பின் ஆசான் (ஆசிரியர்) சு.வெங்கடேசன் அவர்களுக்கு. உங்களின் எழுத்துப் பணி தொடர வேண்டும். உங்கள் ஆய்வில், உங்கள் எழுத்துக்களில், எங்கெங்கும் உள்ள தமிழ் கண்டெடுக்கப்பட வேண்டும். கௌரவிக்க தமிழ் நெஞ்சங்கள் காத்துக் கிடக்கின்றன. தமிழால் , தமிழோடு , தமிழுக்காக இணைவோம். வாழ்க தமிழ். வளர்க தமிழ்...🙏🙏🙏.

தமிழச்சி கலாவதி அய்யனார்.